22 May, 2013

இரோம் ஷர்மிலா


 இரோம் ஷர்மிலா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வட கிழக்கு, உண்ணாவிரதம், அவ்வபோது ஊடகங்களில் மூக்கில் குழாயுடன் காண்பிக்கப்படும் பெண்மணி.
இரோம் ஷர்மிலா ஆயுதமேந்திய படைகள் (சிறப்பு அதிகாரங்கள்), 1958 சட்டத்திற்கு எதிரான தன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 12 வருடங்கள் ஆகின்றன.2000ம் ஆண்டு மாலோம் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றம் சாட்டி எட்டு அசாம் ரைஃபில்ஸ் அதிகாரிகள் கொன்றனர். அதன் விளைவாக ஷர்மிலா தன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து 12 ஆண்டுகள் சோறும் நீரும் இல்லாமல் போராடி வருகிறார். தற்கொலை செய்ய முயற்சிப்பதாக அரசு இவரை கைது செய்வதும், வெளியே வந்தவுடனேயே அவர் உண்ணாவிரததை தொடர்வதும் 12 ஆண்டு காலமாக நிகழ்ந்து வருகிறது. 32 சமூக கலாச்சார அரசியல் சங்கங்கள்அபுன்பா லப்என்ற கூட்டமைப்பாக இணைந்து இச்சட்டத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் மனிப்பூர் மாணவர் இயக்கத்தை சேர்ந்த பீபம் சித்தரஞ்சன் சுதந்திர தினத்தன்று தீக்குளித்து தன் எதிர்ப்பை திரிவித்தார்.
ஆனால் இதற்கெலாம் இது வரை பதில் ஏதும் கிடைக்கவில்லை. மாறாக அரசு தான் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்பதை நேரடியாகவும் மறைமுகவாகவும் உறுதியுடன் கூறிக் கொண்டே வருகிறது. நீதிபதி வர்மா குழு இச்சட்டத்தை முழுமையாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. இப்பரிந்துரைகளைப் பற்றிய விவாதம் எழுவதற்கு முன்பே சட்டத்துறை அமைச்சர் அஷ்வனி குமார் இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது கடினம் என்று கூறினார். இதே கருத்தை சிதம்பரம் அவர்களும் கூறினார். மேலும் அரசு கொண்டு வந்த வன்கொடுமைக்கு எதிரான அவசர சட்டத்தில் இச்சட்டத்தை பற்றிய குறிப்பு எதும் இல்லை.

ஆயுதமேந்திய படைகள் (சிறப்பு அதிகாரங்கள்), சட்டம்1958
இச்சட்த்தை எதிர்ப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று ராணுவத்தை கொண்டு மக்களை ஒடுக்குவதே இச்சட்டத்தை சாராம்சமாக இருக்கிறது. இதன் மூலம் ராணுவ அட்டூழியங்கள் நிறுவனப்படுத்தப்ப்டுகின்றன. இந்திய ராணுவத்தை சேர்ந்த 3, 37,000 பேர் ஜம்மு காஷ்மீரில் , 2, 80, 000 பேர் வடகிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளனர். மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மனிப்பூரில் 20 அல்லது குறைவான்வருக்கு ஒரு ஆயுதமேந்திய ராணுவ வீரர் உள்ளார்
இரண்டு இவ்வாறு வன்முறைகளை ஏவும் அதிகாரிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் இவர்களுக்கு பதவி உயர்வும், பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இச்சட்டம் சந்தேகத்தின் பெயரிலேயே எவரையும் கொல்லவும் ஆயுதமேந்திய படைகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தவும் அதிகாரம் வழங்குகிறது. இதில் இன்னும் மோசமான அம்சம் , இப்படைகளை எந்தவொரு நீதிமன்றத்தின் முன்னும் நிறுத்தி கேள்வி கேட்க முடியாது .  இம்மாதிரியான கண்மூடித்தனமாக எந்தவொரு  ஜனநாயக அரசும் அதிகாரங்களை வழங்கியதில்லை. Non-commissioned அதிகாரிக்கு கூட அதிகாரம் வழங்கப்பட்டது.

இச்சட்டம் 1942ல் பிரிட்டிஷ் காலனிய ஆட்சி காலத்தில் லின்லித்கோவால்(பிரபு)  கொண்ட வரப்பட்ட அவசர சட்டத்திலிருந்து பிறந்தது. இது மாதிரியான சட்டம் பிரிட்டனில் கூட இருந்ததில்லை. சுதந்திரப் போராட்டத்தை தலைமை தாங்கிய காங்கிரசையும் அதில் கலந்து கொண்டவர்களையும் ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட இச்சட்டம் காங்கிரஸ் காலத்தில் நேரு தலைமையிலான அரசால் 1958ல் சுதந்திர இந்தியாவில் இயற்றப்பட்டது. இது இயற்றப்பட்ட காலத்தில் அசாம் மனிப்பூர் ஆகிய இடங்களில் மட்டும் அமலாக்க படும் என்று கூறிய வாக்கு 1976ல் இந்த்யாவின் எந்த பகுதிக்கும் பொருந்தும் என்று மாற்றிய போது பொய்த்து போனது. இப்படி தொடர்ந்து மக்கள் அரசிடமிருந்து பெற்று வருவது ஏமாற்றமும் அலட்சியப் போக்கும் தான்.

இச்சட்டம் வருவதற்கு முன்பே அசாமில் 1955ல் நாகா தீவிரவாதத்தை எதிர் கொள்ள அசாம் Disturbed Areas சட்டம் இயற்றப்பட்டது. AFSPA 1990ல் ஜம்மு காஷ்மீரிலும் அமலாக்கப்பட்டது.1942 அவசர சட்டம், 1955 அசாம் சட்டம், 1958 AFSPA அனைத்தும் ஒரே உயிர் கொண்ட பல வடிவங்கள். இச்சட்டங்களின் மொழியும் தொனியும் மாறாமல் இருக்கின்றன. பிரிடிஷாக இருந்தாலும் காங்கிரஸாக இருந்தாலும் அரசின் ராணுவம் குறித்த பார்வை எவ்வாறு இருக்கிறது என்பதற்கு இது எடுத்துகாட்டு.

பெண்கள் மீது பாலியல் தாக்குதல்
எந்த போரிலும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். உலகம் முழுவதும் போரும் ராணுவமும் ஆணின் உலகங்களாக இருக்கின்றன. தங்கள் பலத்தையும் எதிரியின் பலவீனத்தையும் நிறுவுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதம் பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவது.

2004ல் நள்ளிரவில் கடத்தப்பட்ட தங்க்ஜம் மனோரமா மக்கள் விடுதலை படையை சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர். எப்போதுமே சமூக வாழ்க்கையில் வெகுவாக பங்கேற்ற வட கிழக்கு பெண்கள். இதை தொடர்ந்து நிர்வாண போராட்டம் நடத்தினர். ”இந்திய ராணுவமே: எங்களை பாலியல் பலாத்காரம் செய்என்ற பதாகையை தாங்கி அவர்கள் நடத்திய போராட்டம் மனித தன்மை கொண்ட எவரையும் உலுக்கி இருக்கும். ஆனால் இந்திய அரசை அல்ல.
இது வட கிழக்கில் மட்டுமல்ல. சீருடை அணிந்தவர்களின் பாலியல் தாக்குதல் வேறெங்கும் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் வனத்துறையினரும் காவல்துறையினரும் நடத்திய அட்டூழியங்கள் எவராலும் மறக்க இயலாது. இங்கு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க முடிந்தது. ஆனால் AFSPA அமலில் உள்ள இடங்களில் இந்த பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீரில் 30 பெண்களையும் குழந்தைகளையும் கூட்டு வன்புணர்ச்சி செய்த குனன் போஷ்பொரா வழக்கு, ஷோபியன் வழக்கு போன்ற பல வழக்குகளில் ராணுவத்தினர் தப்பித்துக் கொண்டே வருகின்றனர்.
புறக்கணிக்கப்படும் வடகிழக்கு
இரோம் ஷர்மிலாவின் உண்ணாவிரதம் 2000த்தில் நடந்த சம்பவத்திற்கான எதிர்ப்பாக மட்டும் காண இயலாது. 1958ல் இச்சட்டம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகள், அதிற்கு முன்பிலிருந்தே இந்தியாவின் புறக்கணிப்பு- இதற்கான் எதிர் விளைவு இது.
பொடாவை திரும்ப பெற்ற அரசு AFSPAவை கைவிட வில்லை. வட கிழக்கை புறக்கணிக்கும் நடவடிக்கையான இதில் அரசியல் நோக்கங்களும் உள்ளன. பொடாவினால் பாதிக்கப்படும் தேர்தல் தொகுதிகளை விட AFSPAவினால் பாதிக்கப்படுபவை குறைவே
மனிப்பூர் 1972 வரை யூனியன் பிரதேசமாக தான் இருந்தது. மக்களை ஒடுக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டப் போது இதை எதிர்த்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலோ, ஏன் மனிப்பூரின் இம்பால் நகரத்தில் கூட பெரியளவு போரட்டங்கள் இல்லை. அரசு இச்சட்டங்களை நியாயப்படுத்திக் கொண்டே இருந்தது. அரசின் அலட்சிய போக்கும் நிறைவேற்றப் படாத வாக்குறுதிகளும் மக்களின் மனதில் ஆழமான ரணத்தை ஏற்படுத்தியுள்ளன. 1947ல் எழுதப்பட்ட மனிப்பூரின் அரசியல் சட்டம், 1949ல் திணிக்கப்பட்டசேர்தல் ஒப்பந்தத்தில்மீறப்பட்டதாக மக்கள் கருதுகின்றனர். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உள்ள விரிசல்களில் மண்ணில் புதைக்கப்படுவது மக்களின் அடிப்படை உரிமைகள்.
அமெரிக்காவை பற்றியும் ஹாலிவுட்டை பற்றியும் தெரிந்து கொள்ள இருக்கும் ஆர்வம் நம் தேசத்து வடகிழக்கு மக்களை பற்றி அறிந்து கொள்வதில் இல்லை. ’சிங்கிஎன்று எள்ளி நகையாடும் நாம் அவர்களது கலாச்சாரம், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றிய குறுகிய அறிவே கொண்டுள்ளோம்.
கங்க்ளா மனிப்பூர் மக்களின் வரலாற்று கலாச்சார முக்கியத்துவம் மிகுந்த இடம். மனிப்பூர் மக்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் மதிக்காத அசாம் ரைஃபில்ஸ் கங்க்ளாவில் குடியமர்ந்து வன்முறைகளை ஏவிக் கொண்டு இருக்கிறது. இலங்கையில் உள்ள தமிழருக்காக குரல் கொடுக்கும் இந்தியர்களுக்கு இந்தியாவின் அங்கமான வட கிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களின் பெயராவது தெரிந்திருக்குமா?
இரோம் ஷர்மிலாவின் போராட்டம் ஊடகத்திற்கும் ஒரு பொருட்டாக தெரிந்ததில்லை. அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால் தான் இரோம் ஷர்மிலா நினைவுக்கு வருவார். டெல்லியில் நடந்த சம்பவத்திற்கு வெகுண்டெழுந்த மக்கள், ஊடகம், தொடர்ந்து வட கிழக்கிலும் ஜம்மு-காஷ்மீரிலும் நிகழும் வன்கொடுமைகளை மறந்தது ஏன்.
இரோம் ஷர்மிலாவின் போராட்டத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில் இம்மாதிரியான போராட்டதிற்குள்ள வரையறைகளை கவனிக்க வேண்டும். உண்ணாவிரத வடிவிலான போராட்டம் ஒரு வகையான அச்சறுத்தல் தான். இதை கொண்டு நிரந்தரமான தீர்வு எதையும் காண முடியாது.
அதோடு இபோராட்டம் AFSPA திரும்ப பெற்று விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று தோற்றத்தை தருகிறதுஇது உண்மையல்ல. AFSPA இல்லாத போது மாநில அரசு தன் படைகளை வலிமை படுத்தி அசாம் மாநில சட்டத்தை போல வேறொரு சட்டத்தை இயற்ற முடியும்.
ராணுவத்திற்காக கிட்டத்தட்ட 70000 கோடி ரூபாய் வருடத்திற்கு செலவிடப்படுகிறதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு செலவிட மனமில்லாத அரசு ராணுவத்திற்கு செலவு செய்ய தயங்குவதில்லை. இதன் பின்புலம் அரசு என்ற நிறுவனத்தை நடத்துவதற்கு ராணுவம் அவசியம். ராணுவம் என்றும் மனித தன்மை கொண்டதாக இருக்காது. இருக்க முடியாது. எனவே போராட்டங்கள் ஒரு சட்டத்தை எதிர்த்தோ சில அதிகாரிகளை எதிர்த்தோ இருந்தால் அவை எந்த வகையிலும் தீர்வை தராது. வன்முறையற்ற நிரந்தரமான தீர்வை காண வலுவான போராட்டங்கள் அரசு நிறுவனங்களை எதிர்த்து எழ வேண்டும்.